தமிழகத்தில் புதிதாக 7 செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சர் அருண்ராஜ்

தமிழகத்தில் புதிதாக 7 செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சர் அருண்ராஜ்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் புதிதாக 7 செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும். நெல்லை, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல்லில் தலா 100 இடங்களும், கோவையில் 60 இடங்கள் கொண்ட கல்லூரியும் அமைக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களில் தலா 100 பி.எஸ்.சி நர்சிங் இடங்களுடன் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும். கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில அரசு நிதியில் 60 பிஎஸ்சி நர்சிங் இடங்களுடன் புதிய செவிலியர் கல்லூரி தொடங்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் காலி பணியிடங்கள் இருக்கக்கூடாது என்பது தான் தவெக அரசின் நோக்கம். அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமான பணிகள் நிறைவுற்ற மருத்துவமனைகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்,” என்றார்.

பின்னர், ரிஷிவந்தியத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்படுமா? என்ற உறுப்பினர் கேள்விக்கு, “தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

மேலும், வள்ளியூர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு, “தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். பின்னர், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு ஃப்ரீஸர் பாக்ஸ் மற்றும் சி.டி.ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும் என எம்எல்ஏ மோகன் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு 2 ஃப்ரீஸர் பாக்ஸ்கள் வழங்கப்படும். மேலும், தேவையிருப்பின் சி.டி. ஸ்கேன் வசதியும் ஏற்படுத்தித் தரப்படும். பண்ருட்டி அரசு மருத்துவமனையை கடலூர் அரசு மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர், திமுக எம்எல்ஏ ஓபிஎஸ் பேசுகையில், “பாம்புக்கடி பிரச்சினைகள் பற்றி 29 நிமிடங்கள் அமைச்சர் அருண்ராஜ் பதில் சொன்னார்; பாம்புக்கடி பிரச்சினைகள் உள்ள பகுதிகளில் நாக தோஷம் இருப்பதாக புரிந்துகொள்கிறேன். நாக தோஷம் கழிப்பதற்கு பிரார்த்தனைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய, அமைச்சர் அருண்ராஜ், “எங்கள் அரசு அறிவியல்ப்பூர்வமாக இயங்கக்கூடிய அரசு; தோஷம், பில்லி சூனியத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை; ஜலதோஷம் தான் அதிகம் உள்ளது. பாம்புக்கடி தோஷம் இல்லை” என்று கூறினார்.

தமிழகத்தில் புதிதாக 7 செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சர் அருண்ராஜ்
“தொடர்ந்து உயரும் நூல் விலைக்கு யார் பொறுப்பு?” - மத்திய, மாநில அரசுகளுக்கு வேல்முருகன் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in