

அமைச்சர் அருண் ராஜ் |கோப்புப் படம்
சென்னை: சென்னை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அசைவ உணவு விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான முறையில் உணவு தயாரிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூரில் ‘ஆரோக்கியமான சுகாதாரமான உணவு’ திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த 5 மாவட்டங்களில் சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தெருவோர உணவுக் கடை வைத்திருப்போர் தரமான சுகாதாரமான உணவு தர வேண்டும் என்பதற்காக புதிய விஷயங்கள் முன்னெக்கப்பட்டுள்ளது. உணவகப் பணியாளர்களுக்கு டைபாய்டு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைகளுக்கான தங்க மோதிரம் திட்டம் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் அதிகரிக்கும்,” என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் விபத்து குறித்துப் பேசிய அவர், “அம்மோனியா கசிவு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வாயுக் கசிவால் இறந்தோரின் உடல்கள் அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள், பணம் வாங்குவதாக புகார் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு இவ்வாறு இடையூறு ஏற்பட்டால், இது குறித்து 104 என்ற எண்ணுக்கு புகாரளிக்கலாம். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.