

அமைச்சர் அருண்ராஜ்
சென்னை: ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க பாஜக பக்கம் செல்கிறது திமுக என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை வடபழனி விஜயா ஹெல்த் சென்டர் மருத்துவமனையில் செவிலியர்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மருத்துவமனைகளில் மருத்துவர்களுடன், செவிலியர்களின் திறனும் தேவைப்படுகிறது. நீண்ட நாட்களாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் நல்ல செய்தி வரவுள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த காலங்களில் திமுக கூட்டிய கூட்டத்தில் தவெக பங்கேற்றது.
இதுபோன்ற மாநில நலன் சார்ந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது, திமுக புறக்கணிப்பது, அவர்களை பற்றி மக்கள் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. பல்வேறு காரணங்களால் மத்திய அரசுடன் திமுக பணிந்து செல்கிறது. அவர்களின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிது, திமுகவுக்கு மகிழ்ச்சி தான். அவர்கள் எப்போது பாஜக பக்கம் செல்லலாம், ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கலாம் என்று இருக்கிறார்கள். இதை அவர்கள் நல்வாய்ப்பாக பார்க்கிறார்கள். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிந்ததாக தெரிவித்தனர். ஆனால், சென்னையின் வளர்ச்சிக்காக 60 ஆண்டுகளில் எவ்வித திட்டமிடலும் இல்லை. பல்வேறு நீர் நிலைகளில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில், பல அறிவிப்புகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.