

அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை: “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம். நல்ல முடிவு எடுப்போம்” என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னையில் டிச.26 முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி, இது குறித்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்களை போன்றவர்கள். அவர்களை நாங்கள் கைவிட மாட்டோம்.
நாங்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். போராட்டம் நடத்துபவர்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள். நல்ல முடிவை எடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதை போராட்டமாகவோ, ஆர்ப்பாட்டமாகவோ நான் பார்க்கவில்லை. தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே ஆசிரியர்கள் போராடுகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “போராட்டம் குறித்து எஸ்எஸ்டிஏ பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, “ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறோம். கடந்த தேர்தலின்போது எங்கள் கோரிக்கையை ஏற்ற திமுக, அதை தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவித்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை. ஊதிய முரண்பாடு களையப்படாவிட்டால், பள்ளிகள் திறந்த பிறகும் போராட்டம் தொடரும். தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.