

துரைமுருகன் | கோப்புப்படம்
வேலூர்: எம்ஜிஆரை போல் முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேசப்போகிறார் என்பது இப்போது பொருந்தாது என முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் காட்பாடியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தமிழக முதல்வர் எதற்காக பெங்களூரு போகிறார் என்பதை இன்னும் அவர் அறிக்கையாகவோ, செய்தியாகவோ வெளியிடவில்லை. அனுமானத்தில் அவருடைய அமைச்சர்கள் சொல்வதை பார்த்து காவிரி பிரச்சினைக்காக என சொல்கிறார்கள்.
காவிரியில் பிரச்சினை குறித்து மேலாண்மைக் குழு, ஒழுங்காற்று குழுவிடம் முறையிடலாம். இரண்டும் கேட்கவில்லை என்றால் மத்திய நதிநீர் ஆணையத்திடம் சொல்ல வேண்டும். இதைக்கேட்க குழுவுக்கு தான் அதிகாரம் உண்டு. நீங்களாகவே கர்நாடகத்திடம் கேட்டால் நாம் வாங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவு வீணாகப்போய்விடும்.
கர்நாடகா போவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்திருக்கலாம். எம்ஜிஆரை போல் முதல்வர் விஜய்யும் கர்நாடகம் சென்று பேசப்போகிறார் என்கிறார்கள். எம்ஜிஆர் போனது நீதிமன்றத்துக்கு நாம் போகாத நேரம். அப்போது, நம்மிடம் நீதிமன்ற உத்தரவு எதுவும் இல்லை. இப்போது, நம்மிடம் நீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆகையால், அதோடு இது பொருந்தாது. பாஜகவிடம் நாங்கள் நெருங்கவில்லை. காங்கிரஸை விட்டு நாங்கள் வெளியே வந்துவிட்டோம். இவ்வாறு கூறினார்.