

சென்னை: மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற் பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை, கடும் எதிர்ப்புகளால் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் என்எல்சி விரிவாக்கம் உட்பட பல்வேறு முக்கியத் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அரசிதழ் அறிவிக்கைகளை நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா நிலை-3 அமைப்பதற்காக 22.16 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும். இதற்கான இழப்பீட்டுத் தொகை சிப்காட் மூலமாக வழங்கப்படும் என்று கடந்த செப்.1-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டதால் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்றது. இதுதொடர்பாக சிப்காட் மேலாண்மை இயக்குநர் சி.அ.ராமன் வெளியிட்ட அறிவிக்கையில், “திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்படி, மேல்மா கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மேல்மா கிராமத்தில் நில எடுப்பு கைவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.