

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சீரமைப்புப் பணிகள் செப்.10-ல் நிறைவடையும். செப்.17-ல் திட்டமிட்டபடி குடமுழுக்கு நடைபெறும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களின் சொத்துகளை மீட்கவும், மீனாட்சி அம்மன் கோயிலை சீரமைத்து விரைவில் குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிடக் கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில், மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. புதிய நவீன சமையலறை பணிகளும் தொடங்கியுள்ளன. இப்பணிகள் செப்.10-க்குள் நிறைவடையும். 17-ல் குடமுழுக்கு நடைபெறும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடக்கிறது எனக் கூறப்பட்டது. பின்னர், விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.