

கோப்புப் படம்
சென்னை: வட தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை நாளை முதல் 7-ம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மரத்வாடா முதல் தென் தமிழகம் வரை உள் கர்நாடகம் வழியாக 900 மீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்.4) ஓரிரு இடங்களிலும், 5, 6 தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலுமும், 8, 9 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் ஏப்.7-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாகவும், தென் தமிழகத்தில் வழக்கமான அளவிலும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 9 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 செமீ, வால்பாறை, சின்கோனாவில் 5 செமீ, சோலையார், தேனி மாவட்டம் தேக்கடியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.