சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களிக்கப் போகும் கட்சிகளைத்தான் ராகுல் காந்தி `எட்டப்பர்கள்' என்று கூறியதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவையில் இந்த வாரம் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஏப்.17-ம் தேதி தோற்கடித்த மசோதாவை பிரதமர் மோடி அரசு மீண்டும் கொண்டுவர திரை மறைவில் பல்வேறு வேலைகளை செய்து வருகிறது.
தொகுதி மறுவரையறை என்பது தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் எதிரானது. கடந்த ஏப்ரல் 17-ம் தேதி மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து எப்படி தோற்கடித்தோமோ, அதைப்போல தோற்கடிப்பதற்கான முழு முயற்சியும் மேற்கொள்வோம்.
கடந்த ஏப்.17-ம் தேதி மக்களவையில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்ட போது யார் பட்டாசு வெடித்தார்களோ, யார் நகலை கிழித்தார்களோ, அவர்களை அனைவருக்கும் தெரியும். இப்போது அவர்களின் மனநிலை மாறாது என நம்புகிறேன்.
ஏற்கெனவே தொகுதி மறுவரையறைக்கு பாஜக, பாமக, அதிமுக ஆகிய கட்சிகள்தான் ஆதரவளித்தன. இவர்களோடு யார் சேரப் போகிறார்கள் என்பது இதற்கு பிறகுதான் தெரியவரும்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்து வாக்களிப்பார்களோ அவர்களை `எட்டப்பர்கள்' என குறிப்பிட்டார்.
அந்த பட்டியலில் முதலில் பாமகவும், தொடர்ந்து அதிமுக, பாஜக ஆகியவையும் உள்ளன. தமிழகத்துக்கு நீர் வர வேண்டும். அதற்காக கர்நாடக முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்த நினைத்தால் அது சரிதான். கர்நாடகத்தில் தண்ணீர் கொடுக்கக் கூடாது என அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக நிற்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறி வருகின்றனர். தமிழகத்தில் தண்ணீரை விட அரசியல்தான் முக்கியமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.