மதுரை சித்திரை திருவிழா - அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்ற இந்து முன்னணி வலியுறுத்தல்

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

Updated on
2 min read

சென்னை: பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருடா வருடம் சித்திரை திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த ஆண்டு நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர இந்து சமய அறநிலையத்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும்.

அக்னி வெயில் சுட்டெரிப்பதால் பக்தர்கள் தங்குவதற்கு ஆங்காங்கே நிழற்குடைகள் அமைப்பது, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தருவது, போக்குவரத்து நெரிசலை சரி செய்வது போன்ற முக்கியமான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி சராசரி நாட்களிலேயே இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவது மிகவும் கடினமானதாக உள்ளது. திருவிழா காலம் என்பதால் அதிகமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். எனவே வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக பார்க்கிங் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் அவசர காலத்தில் மக்கள் செல்வதற்கு இடையூறாக இருக்கும். எனவே போக்குவத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர அதிக காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை இந்த விழாவில் அதிக அளவில் கலந்து கொள்வதால் மருத்துவ முதலுதவி வசதிகளை ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டும்.

மிகவும் தொன்மையான சித்திரை திருவிழாவில் பொதுமக்களும் பக்தர்களும் தாமாக முன்வந்து அன்னதானம் நீர் மோர் பந்தல் அமைப்பது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றனர். பக்தி நோக்கோடு அமைக்கப்படும் இது போன்ற காரியங்களுக்கு அரசாங்கம் எந்த விதமான தொந்தரவும் செய்யக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வதால் அவர்கள் தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளையும் அறநிலையத்துறை முன்னின்று ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகும். இந்த திருக்கல்யாணத்தை காண்பதற்காக பக்தர்களுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளில் முறைகேடு நடப்பதாக புகார் வந்துள்ளது. திருக்கல்யாணம் மற்றும் தரிசனம் சம்பந்தமான தகவல்களை இணைய வழியில் தருகிறோம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ஆனால் பக்தர்கள் இணையத்தில் சென்று தேடினால் அந்த இணைய பக்கம் முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பக்தர்கள் சிரமப்படுகின்றனர். திருக்கல்யாண வைபவ டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

சாதாரண காலங்களில் கோயில்களில் தரிசன முறை கட்டணமும் சிறப்பு பூஜைகளுக்கான கட்டணமும் பக்தர்களை சிரமப்படுத்தி வரும் வேளையில் மிகவும் முக்கியத் திருவிழாவான திருக்கல்யாணத்திலும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பது கண்டனத்துரியதாகும்.

இது போன்ற முறைகேடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆராய்ந்து மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன் திருவிழா காலங்களில் முறையான தரிசனத்தை பக்தர்கள் பெறுவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்</p></div>
‘தெலங்கானா ராஷ்ட்ரிய சேனா’ கட்சியை தொடங்கியது ஏன்? - கவிதா விவரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in