

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத் துறையில் நடைபெறாத சாலைப் பணிகளுக்கு முன்னரே தொகையை விடுவித்து கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையில், அதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தனக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு தொடர்பான வழக்கு மற்றும் லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார்.
எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முன்பாக ஆஜராகி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.
எனவே லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரினார். லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, பதில்மனு தாக்கல் செய்ய ஆக.14 வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, இந்த வழக்கில் எ.வ.வேலுவுக்கும் சம்மன் அனுப்பி விசாரணையை தொடரலாம் என்றும், அதேநேரம் அவர் மீது எந்தவொரு கடும் நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது என ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ஆக.14 வரை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்துள்ள நீதிபதி, ஒருவேளை அவர் வெளிநாடு செல்வதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் முன்அனுமதி பெற்று செல்லலாம் என உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, அதற்கு எ.வ.வேலு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.