

சென்னை: ‘திமுக கூட்டணி கட்சிகள் மீது இந்து விரோத முத்திரை குத்துவது உள்நோக்கம் கொண்டது’ என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மேல் முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனால் ஆத்திரமும், எரிச்சலும் அடைந்துள்ள பியூஷ் கோயல் போன்ற பாஜக தலைவர்கள், திமுக அரசையும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியையும் ‘இந்துக்களின் எதிரி’ என கடுமையாக விமர்சித்து வருவது கண்டனத்துக்குரியது.
இந்து மதம் என்பது வேறு. சனாதன தர்மம் என்பது வேறு. சனாதன தர்மத்தை ஒழிப்பது சாதியை, ஆணாதிக்கத்தை, சாதி அடிப்படையிலான குலத்தொழிலை ஒழிப்பதாகும்.
இந்துமதத்தை ஒழிப்பதல்ல. சாதி ஒழிக்கப்பட வேண்டும், சமூகநீதி காக்கப்பட வேண்டும் என செயல்படும் திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் ‘இந்துக்களின் எதிரி’ என்று கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதே தவிர வேறொன்றுமில்லை.
உண்மையில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும்தான் பட்டியலினம், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பெரும்பான்மையான இந்துக்களுக்கும், அனைத்து சாதி இந்து பெண்களுக்கும் எதிரான அமைப்புகளாகும்.
எனவே ஆன்மீகத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்துத்துவ மதவெறி அரசியலுக்கு பயன்படுத்துவதை பியூஸ் கோயல் போன்றவர்கள் கைவிட வேண்டும் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.