

பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: “தமிழக முதல்வர் விஜய்க்கு நாம் அவகாசம் கொடுப்போம். ஒருவேளை வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்றால், நிச்சயம் சட்டப்பேரவையில் தேமுதிக சார்பில் கேள்வி எழுப்புவோம்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
இது குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “என்னை வெற்றிபெற வைத்த விருதாச்சலம் தொகுதி மக்கள், மதச்சார்பற்ற கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் தேமுதிகவினருக்கு எனது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். விருதாச்சலம் தொகுதிக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பில், நான் சார்ந்திருக்கும் மதச்சார்பற்ற கூட்டணிக்குத்தான் எனது ஆதரவை அளிப்பேன்.
தமிழக முதல்வராகப் பதவியேற்றிருக்கும் விஜய்க்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற காலஅவகாசம் கேட்டிருக்கிறார். எனவே, அவருக்கு நாம் அவகாசம் கொடுப்போம். ஒருவேளை வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்றால், நிச்சயம் சட்டப்பேரவையில் தேமுதிக சார்பில் கேள்வி எழுப்புவோம்.
கஜானாவில் பணம் இல்லை என முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்தான் கூறியிருக்கிறார். அது அவருடைய கருத்து, எனவே அது குறித்து அவர்தான் விளக்க வேண்டும். அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது; அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று அவர் கூறினார்.