

எல்.முருகன்
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்திருக்கின்றனர் என்றும் தே.ஜ. கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா போதைப் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. விளாத்திகுளம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
கொங்கு மண்டலத்தில் முதிய தம்பதியினரை குறி வைத்து கொலை சம்பவம், நாங்குநேரியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா போதை கும்பல் அட்டகாசம் என கஞ்சா ஆசாமிகளின் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் செல்வதால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
திமுகவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் குடிநீர் கட்டணம், சொத்துவரி போன்ற பல்வேறு வரி உயர்வை மக்கள் மீது திணித்துள்ளனர். இதனால் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்திலும், கோபத்திலும் உள்ளனர். எப்போது தேர்தல் வரும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புலாம் என காத்திருக்கின்றனர். தே.ஜ. கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.