

சென்னை: காசி தமிழ்ச் சங்கமம் நான்காவது பதிப்பு மூலம் தமிழ் இந்தியாவின் பெருமிதம் என மோடி மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காசி தமிழ்ச் சங்க மத்தின் நான்காவது பதிப்பு டிச.2-ம் தேதி (இன்று) கோலாகலமாக தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் காசி தமிழ்ச் சங்கமத்துக்கு தமிழக மக்களிடையே ஆதரவும், வரவேற்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ‘தமிழ் கற்கலாம்’ என்ற முழக்கத்துடன் நடைபெறுகிறது.
வாரணாசியில் டிச.2 முதல் 15 வரை நடைபெறும் இதில், தமிழகத்தில் இருந்து 7 குழுக்கள் காசிக்கு வருகை தந்து காசியின் பெருமையையும், தமிழகத்துடனான தொடர்பையும் அறிந்து கொள்வதுடன், ஆன்மிக அனுபவத்தைப் பெற இருக்கின்றனர்.
இரண்டாம் கட்டமாக, தமிழகத்தில் டிச.15 முதல் 31 வரை நடைபெறும் நிகழ்ச்சியில், வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த பயணத்தில் தமிழ் பண்பாடு, புராதனமான கலாச்சாரம், நாகரீகதொடர்பு போன்றவற்றை தெரிந்து கொள்வதுடன், தமிழ் மொழியை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றனர்.
கூடுதலாக, பள்ளிகளில் தமிழ் மொழிமற்றும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தவும், மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழகத்தில் இருந்து 50 ஆசிரியர்கள் காசிக்கு வரவுள்ளனர்.
இதன்மூலம், தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி உயர்வானது, தமிழ் இந்தியாவின் பெருமிதம் எனபிரதமர் மீண்டும் ஒருமுறை உறுதிபட கூறியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைவரும் தமிழ் மொழி கற்க வேண்டும் எனும் காசி தமிழ்ச் சங்கமத்தின் கருப்பொருளை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் வாழும் பிற மாநில மக்களுக்கும் தமிழ் மொழியை கற்பதற்கான சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.