

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8 கொலைகள் நடந்துள்ளன. முதல்வரைப் போல் காவல்துறையும் ஓய்வில் உள்ளதா என திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘‘கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 8 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலி ழந்து விட்டது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி.
தமிழகத்தின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் குற்ற விகிதத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது தவெக அரசு. தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் போது, அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதல்வரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?’’ என தெரிவித்துள்ளார்.
இதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் பார் உரிமையாளரால் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை, மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் காவல் நிலையம் அருகிலேயே சரவணன் என்ற நபர் வெட்டிக் கொலை, மதுரை மேலூர் அரசுப் பள்ளி அருகே செல்லத்துரை என்ற இளைஞர் கொலை, சென்னை புறநகர் குன்றத்தூர் அருகே தண்டலத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை, தாம்பரத்தில் வெல்டர் கொலை, கரூரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் என ஒரே நாளில் தமிழகத்தில் 8 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய்க்கு, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறதா? எனவே, தமிழகத்தில் தினமும்அரங்கேறும் குற்றச் சம்பவங்களை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்வதோடு, இந்த கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.