

சென்னை: “சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது” என முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை செயல்பாடுகளை, திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்தில் இருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதில் இருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவுக்கும், அதன் முதல்வர் விஜய்க்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கருணாநிதியைப் பற்றியோ, திமுகவைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்துக்கு நினைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதல்வர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதல்வர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய வாட்ஸ்அப் ஃபேக்டரி பொய்களையும் கலந்து, முதல்வருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது. ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. சத்தமாகச் சொல்லப்படும் அனைத்தும் உண்மையல்ல (Not everything loud is true)” என்று அவர் பதிவிட்டுள்ளார்.