

கனிமொழி எம்.பி
சென்னை: “கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்கள், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா எனும் கேள்வியை எழுப்புகிறது” என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “கள்ளக்குறிச்சி அருகே வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டியை நகைகளுக்காக தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், திருநெல்வேலி மணிமூர்த்திஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரை குடியிருப்பு பகுதியிலேயே தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் செய்தி வருகிறது.
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்கள், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா எனும் கேள்வியை எழுப்புகிறது. இத்தனை சம்பவங்களுக்குப் பிறகும், இன்னும் எத்தனை காலத்துக்கு சாக்குப் போக்குகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறது தவெக அரசு?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.