

கடலூர்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அல்லது திருமாவளவனை முதல்வராக்க திமுக முயற்சி செய்தது. ஆனால் மக்கள் விஜய்க்கு வாக்களித்த நிலையில் மாற்று ஏற்பாடுகள் என்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதால் தவெக அரசு அமைய ஆதரவு அளித்தோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியதலைவர் காதர்மொகிதீன் விளக்கம் அளித்துள்ளார்.
கடலூர் பரங்கிப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: தேர்தல் பிரசாரத்தின்போதே பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மாற்றத்துக்கான மனநிலை இருப்பதாக திமுகவிடம் தெரிவித்தோம், ஆனால், அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த பிறகே கட்சி மாறியுள்ளனர், இதை ‘கட்சி உடைப்பு’ என்று கூற முடியாது. திமுகவுடனான எதிர்கால உறவு குறித்து 20-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும். தீய சக்தியை தூய சக்தியாக மாற்றும் முயற்சியை விஜய் மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.