

காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை முதல் பட்டினப்பாக்கம் வரை கடலில் பொதுமக்கள் இறங்காமல் இருக்க, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படம்: ம.பிரபு
சென்னை: காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரள்வார்கள் என்பதால், சென்னையில் 16 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக காணும் பொங்கல் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பொதுமக்கள் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களுக்கு குடும்பம், குடும்பமாக சென்று உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். எனவே மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை முழுவதும் 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் 1,500 ஊர்க்காவல் படையினர் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர். மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப்பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுக்க கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் கைகளில் பிரத்யேக அடையாளப் பட்டை (பேண்ட்) கட்டிவிடப்படுகிறது.
மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 ட்ரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் 4 ட்ரோன் கேமராக்கள் என மொத்தம் 8 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் அதிக திறன் கொண்ட ‘ஏஐ’ ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு அவை மூலம் கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கைத் தகவல்களை ஒலிபரப்பி வருகின்றனர்.
கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள சுற்றுலா பொருட்காட்சி,செம்மொழி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா, பொழுதுபோக்கு தலங்கள், பூங்காக்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.