

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிப்.27-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் அக்ரஹாரத்தில் அவரது வீட்டில் இருந்த ஜெயலலிதா போட்டோ அகற்றப்பட்டது. பின்பு அவரது வீட்டின் முன்புற கதவில் இருந்த அதிமுக சின்னமான இரட்டை இலை கட்டிங் இயந்திரம் மூலம் வெட்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டின் முகப்பில் இருந்த அதிமுக வண்ணமும் மாற்றப்பட்டது.
முழுவதும் திமுகவில் ஐக்கியமான நிலையில் கடந்த 7-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் இணைப்பு விழா ஒன்றையும் மதுரையில் ஓபிஎஸ் நடத்தினார். இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ஓபிஎஸ்.குறித்து பெருமையுடன் பேசினார்.
இந்நிலையில் ஓபிஎஸ்.வீட்டில் மீண்டும் ஜெயலலிதா படம் இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் பரவி வருகிறது. ஓபிஎஸ்அணியைச் சேர்ந்த ரெங்கநாதன் என்பவர் நேற்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். மதுரையில் நடைபெற்ற இணைப்பு விழாவுக்குச் சென்று விட்டு பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து குழுவாக எடுத்துக் கொண்ட போட்டோதான் அது. இந்த புகைப்படத்தின் பின்னணியில் ஜெயலலிதாவும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்திருக்கும் படம் உள்ளது.
கடந்த வாரம் ஓபிஎஸ்.வீட்டில் இருந்து ஜெயலலிதா படங்கள் அனைத்தும் நீக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தப் படம் புதியதாக வைக்கப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஓபிஎஸ்.தரப்பைச் சேர்ந்த சிலர் கூறுகையில், ‘‘ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அவரது இளைய மகன் ஜெயபிரதீப்புக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. இது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்து வந்துள்ளார். அவரது வற்புறுத்தலின் பேரில் ஜெயலலிதா படத்தை வீட்டில் மீண்டும் வைத்திருக்கலாம் என்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.