

சென்னை: எஸ்ஐஆர் பணியில், இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்காமல், அவர்களை உயிர்ப்பிக்கக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் பணியில், மாவட்ட நிர்வாகம் இறந்தவர்களை உயிரோடு கொண்டு வரக்கூடிய செயல்முறையை செய்யக் கூடாது.
ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு சென்றவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படக் கூடாது எனக் கூறி இருக்கிறோம். தொகுதிக்கு 100 பேர் என தன்னார்வலர்கள் ரூ.1000 கூலிக்கு நியமித்துள்ளார்கள். அவர்களின் பட்டியலைக் கேட்டுள்ளோம். இந்த எஸ்ஐஆர் பணி மூலம் தமிழகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட உள்ளனர்.
சென்னையில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை நீக்கப்பட உள்ளனர். ஆனால் இறந்தவர்களின் பெயர், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்களின் பெயர்கள் 20 ஆண்டுகளாக நீக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சி பிரதிநிதி எஸ்.கே.நவாஸ் பேசும்போது, “குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் செயல்படுகின்றன” என்றார்.
பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் பேசும்போது, “இதுவரை 65 சதவீத படிவங்கள்தான் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஒரு பிஎல்ஓ-தான் இருக்கிறார். 100 வாக்காளருக்கு ஓர் உதவியாளர் வீதம் நியமிக்கக் கோரியிருக்கிறோம்.
மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்தில் 400 தூய்மைப் பணியாளர்களை பயன்படுத்தி மாதம் ரூ.1 கோடி முறைகேடு நடைபெற்றதாக புகார் தெரிவித்தோம். ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வோம் என ஆணையர் தெரிவித்துள்ளார்” என்றார்.