

சோனம் வாங்சுக், ஜவாஹிருல்லா
சென்னை: சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: லடாக் மக்களின் அரசியல் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதங்களை வலியுறுத்தி, 21 நாட்களாக அறவழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் அவருடைய விருப்பத்துக்கு மாறாக, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பது, ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல்.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க இயலாத மத்திய பாஜக அரசு, காவல்துறையின் பலத்தாலும், அதிகாரத்தின் ஆணவத்தாலும் ஒடுக்க முயல்வது மிகவும் ஆபத்தான அரசியல் போக்காகும். எனவே, சோனம் வாங்சுக் உடனடியாக விடுதலை செய்யப்பட செய்ய வேண்டும். அவரது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும்.