

திருமாவளவன் | கோப்புப் படம்
திருச்சி: “தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது என்பது உண்மைதான். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி, அதனை சீர் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக விமர்சிப்பதைத் தாண்டி, தனிநபர் ரீதியாக ஒருமையில் விமர்சித்தார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. திமுக நீண்ட நெடிய பாரம்பரியமுள்ள இயக்கம். தற்போது ஆர்ப்பாட்ட மேடைகளில் அவர்கள் பேசிய பேச்சு பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்திருந்தது என்பதை மறுக்க முடியாது.
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அரசின் நிலைப்பாட்டில் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனை முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது என்பது உண்மைதான். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி, அதனை சீர் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மின்வெட்டு தொடர்பாக அதிகாரிகள் சொல்லும் தகவல்களை கொண்டுதான் அமைச்சர்கள் பதில் சொல்கின்றனர். அதிகாரிகள் முறையான, சரியான தகவல்களை அமைச்சர்களுக்கு தரவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இடைத்தேர்தல்களில் பணத்தை கொட்டி இறைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாக்குகளை விலைக்கு வாங்குவது அண்மைக்காலமாக அதிரிகரித்துள்ளது.
வரவுள்ள இடைத்தேர்தலில் அவ்வாறு நடைபெறக் கூடாது. தேர்தல் ஆணையம் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தவெக கொடியின் வண்ணத்தில் அரசுப் பேருந்துகளில் வண்ணம் தீட்டுவது என்பது ஏற்புடையது அல்ல. எந்தக் கட்சியும் அரசாங்கத்தில் அந்த வண்ணத்தை பூசக் கூடாது” என்றார்.