

சென்னை: இஸ்ரோ மூலம் நடப்பாண்டில் 18 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்திய தொழிலக ஆய்வு குழுமம் (சிஎஸ்ஐஆர்) சார்பில் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையில் ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு தொடர்பான 2 நாள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “தொழில் துறையில் வளர்ச்சி அடையும் நோக்கில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் ரூ.1000 கோடி வளர்ச்சி நிதி ஒதுக்கியுள்ளது. புத்தாக்கத் தொழில் நிறுவனங்களும் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவில் 2 லட்சம் புத்தாக்க தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போதைய சூழலில் செல்போன் மூலம் உலகில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். புதிய புத்தாக்க தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு தொழில் துறையை சேர்ந்த முன்னணி தலைவர்கள் உதவிசெய்ய தயாராக உள்ளனர். இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
21 லட்சம் வேலைவாய்ப்பு: தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: இந்தியாவில் இதுவரை 2 லட்சம் புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 21 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களில் மட்டுமே புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களிலும் தொடங்க வேண்டும். இதற்கான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராகவே உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் இந்தியா சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. நடப்பாண்டில் இஸ்ரோ மூலம் 18 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டின் இறுதிநாளான இன்று (பிப். 15) மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய புவி அறிவியல் துறை செயலர் எம்.ரவிசந்திரன், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் கே.ஜே.ராம், சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி இயக்குநர் என்.ஆனந்தவல்லி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.