

கோவை ஈஷா வளாகத்தில் இன்று நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில், ‘பவ்ய பாரத் பூஷன்’ விருதினை பெற்றுக் கொண்டவர்களுடன், விருது வழங்கிய சிறப்பு விருந்தினரான பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஈஷா நிறுவனர் சத்குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: ஜெ.மனோகரன்
கோவை: ஈஷாவில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக இன்று (பிப்.15) கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் உண்மையான பாதுகாப்பு வலிமை மிக்க தேசிய உணர்வில் இருந்து வருகிறது என பேசினார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் 32-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா இன்று (பிப்.15) விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஈஷா நிறுவனர் சத்குரு தலைமை வகித்தார். இவ்விழாவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து, ஈஷா சார்பில் கலை மற்றும் பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, இலக்கியம், நாட்டின் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ‘பவ்ய பாரத் பூஷன்’ விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு விருது வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது: இந்த மகா சிவராத்திரி திருநாளில், இந்த தேசம் முழுவதும், ஹரஹர மகாதேவ் என்ற முழுக்கம் எதிரொலிக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமாி வரை, அருணாச்சல பிரதசேம் முதல் குஜராத் வரை ஒவ்வொரு மனிதரின் விழிப்பிலும் சிவன் வாழ்க்கிறார். ஈஷா யோக மையம் நடத்தும் இந்த விழா சர்வதேச அளவிலான ஆன்மிக கொண்டாட்டமாக மாறியுள்ளது.
இது அவ்வளவு எளிய விஷயம் கிடையாது. இந்த விழா நம் பாரத தேசத்தின் பண்பாட்டு மறுமலர்ச்சியின் புதிய பிரகடனமாக விளங்குகிறது. சமுதாயத்தில் மிகப்பெரிய தேவை என்னவென்றால், ஒவ்வொரு தனிமனிதரும், தனது முழு சக்தியை உணர வேண்டும். தங்கள் உள்நிலை தகுதியை உணர்ந்து, தங்களது பங்களிப்பை சமூகத்துக்கு தர வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இந்த உண்மையை நான் ஆழமாக உணர்கிறேன். தேசத்தின் பாதுகாப்பு என்பது ஆயுதங்கள், தொழில்நுட்பம், நம் வீரரர்களின் உடல் வலிமை ஆகியவற்றோடு தொடர்புடையது தான். இவை அனைத்தும் முக்கியம் தான். இதை உன்னிப்பாக பார்த்தால் உண்மையான பாதுகாப்பு என்பது வெளியில் நாம் ஏற்படுத்தும் சக்தியில் மட்டும் இல்லை.
உண்மையான பாதுகாப்பு வலிமை மிக்க தேசிய உணர்வில் இருந்து வருகிறது. நம் பாரத தேசத்தின் படை வீரர்கள் தங்களுக்குள் அமைதி தன்மையையும், பொறுமையையும் கொண்டு திகழ்கின்றனர். மனிதநேய மிக்க மீட்புப் பணிகளில் ஈடுபடும் நம் அதே வீரர்கள், தேவைப்பட்டால், ருத்ரமூர்த்தியின் ரவுத்திரத்தோடு ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ போன்ற நடவடிக்கைகளில் களமிறங்குகிறார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.