

கோப்புப் படம்
விழுப்புரம்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுநடைபெறுகிறது. இதில், பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. விழுப்புரத்தில் உள்ள இரு பிரபல தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
இரு மையங்களிலும் விடைகள் அச்சிடப்பட்ட காகிதங்களை பார்த்து மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும், இதனை பார்த்த நிலையான பறக்கும் படையினர், நடவடிக்கை எடுக்காமல் திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிகல்வித் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் அந்த மையங்களில் கண்காணிப்பு பணிக்குச் சென்ற இரு பெண் ஆசிரியர்கள் உட்பட 5 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களது பதிலைப் பெற்ற பிறகு, உரியநடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தேர்வு மையம் ஒன்றில், கடந்த ஆண்டு பிளஸ் 2 வேதியியல் தேர்வில், ஒரு பள்ளியில் அனைத்து மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.