

இடுக்கு பிள்ளையார் கோயில் வாசல் அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் குகையில் பக்தர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இரும்பத் தடுப்பு அமைக்கப்பட்டதுடன், எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கிரிவல பாதையில் இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிறிய குகை போன்ற அமைப்பில், ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, பக்கவாட்டில் உள்ள விநாயகரை வணங்கி முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும்.
இந்நிலையில், இக்கோயிலில் கடந்த 24-ம் தேதி நள்ளிரவு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் தாசரிமணிகுமார் என்பவர் கோயிலுக்குள் சென்று வெளியே வர முடியாமல் உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று கோயில் முன்பு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
அதில் உடல் பருமன் உள்ளவர்கள், வயதானவர்கள், மூச்சு பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் உடல்நல குறைவானவர்கள் இடுக்கு பிள்ளையார் கோயில் துவாரம் வழியாகச் செல்ல அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வாசல் அருகே 2 கம்பிகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2 கம்பிகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் நுழைந்து உள்ளே வரும் பக்தர்கள் மட்டுமே இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல முடியும். மேலும் இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு பவுர்ணமி நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.