

கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏவின் ஆதரவாளரும், அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி.சங்கரின் கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள அலுவலகம், அதே பகுதியில் உள்ள புதிய அலுவலகம், பழனியப்பா தெருவில் உள்ள அவரின் வீடு, கொங்கு மெஸ், அதன் உரிமையாளர் மணி வீடு, சக்தி மெஸ், அதன் உரிமையாளர் கார்த்தி வீடு ஆகிய 7 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தன. இதனடிப்படையில், தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், பிரபல ஒப்பந்ததாரருமான எம்.சி சங்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அதோடு, கரூர் - கோவை சாலையில் உள்ள, மணி என்பவருக்கு சொந்தமான கொங்கு மெஸ், சக்தி மெஸ் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியகியுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் 15 வாகனங்களில் வந்த, 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த முறை செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, ஏப்.12-ம் தேதி திமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் நிறுவனங்கள், வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். தொடர்ந்து ஏப்.13-ம் தேதி க.பரமத்தி நொய்யல் சாலையில் உள்ள தனியார் கல்குவாரி நிறுவனம் கல்குவாரி உரிமையாளர்த்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.