

தாமரை எஸ்.ராஜேந்திரன்
அரியலூர்: அரியலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் தாமரை எஸ்.ராஜேந்திரன் போட்டியிடுகிறார் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமைக்கழகம் தங்களது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில். அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக தாமரை எஸ்.ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் அரியலூர் அடுத்த தாமரைக்குளம், கடந்த 1981 முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வருகிறார்.
இவரது தந்தை அதிமுகவில் கிளைக்கழக செயலாளராக இருந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், பார்க்கவி, கவிநிலவு என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது, அதிமுக மாவட்டச் செயலாளராக உள்ளார்.2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அரியலூர் தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு திமுக வேட்பாளர் எஸ்எஸ்.சிவசங்கரை விட 2,043 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ராஜேந்திரனுக்கு அரசு கொறடா பதவி கொடுத்து அழகு பார்த்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்பும், அரசு கொறடாவாக தொடர்ந்து பதவி வகித்து வந்தார். கடந்த 2021 தேர்தலில் அரியலூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு 3,234 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் தற்போது அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக தாமரை ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.