

சென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் காணிக்காரன் அல்லது காணிக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை உட்பட இதர 10 மாவட்டங்களில் வசிக்கும் 954 பேருக்குகாணிக்காரன், காணிக்கர் என கடந்த காலங்களில் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து அந்த சான்றிதழ்களை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு சமூக நீதித்துறை செயலர் நா.சுப்பையன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ளவர்கள் மட்டும், தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில், காணிக்காரன் அல்லது காணிக்கர் இனத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனவே, இப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே காணிக்காரன், காணிக்கர் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 2018 ஜனவரி 1 முதல் 2026 மே 26-ம் தேதி வரை, வருவாய் மேலாண்மை ஆணையரகம் வழியாக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலம், சென்னையில் 40, செங்கல்பட்டு-152, காஞ்சிபுரம்-244, கடலூர்-197, கள்ளக்குறிச்சி-4, மதுரை-3, ராமநாதபுரம்-203, திருவாரூர்-30, வேலூர்-43, விழுப்புரம்-38 என 954 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே கடந்த 2005-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில், வரிசை எண்.7-ல் காணிக்காரன் அல்லது காணிக்கர் சாதி சான்றிதழானது கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் செங்கோட்டை, அம்பா சமுத்திரம் தாலுகாக்களில் உள்ளவர்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இணையதளம் வழியாகவோ, நேரடியாகவோ முறைகேடாக வழங்கப்பட்டிருந்தால் உடனே ரத்து செய்து, அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கு சாதி சான்று
தமிழகம் முழுவதும் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைந்து, விரைந்து சாதி சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், சமூகநீதித் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூகநீதித் துறை செயலர் சுப்பையா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு சாதி சான்று வழங்குவது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை ஒன்றிணைத்து கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதி சான்று கோரி விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் மீது ஆதிதிராவிடர் இனத்தவருக்கு 2 நாட்களுக்குள் வட்டாட்சியராலும், பழங்குடியினத்தவருக்கு ஒரு வாரத்துக்குள் கோட்டாட்சியராலும் சாதி சான்று வழங்கப்பட வேண்டும்.
தாமதித்தால் நடவடிக்கை
ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தீவிர விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
காலம் தாழ்த்தியும், உரிய நடவடிக்கையும் எடுக்காமலிருக்கும் சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சான்றிதழ் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.