

ஐ.ஜி. பவானீஸ்வரி
சென்னை: ரோந்துப் பணியில் ஈடுபடும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி வழங்கப்படும் என ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், கொண்டுவரப்பட்ட `சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை'யை முதல்வர் விஜய் நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கி வைத்துவிட்டார்.
இந்நிலையில் இந்த சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக நியமிக்கப்பட்ட ஐ.ஜி. பவானீஸ்வரி, இப்படையின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் குறித்து நேற்று டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்களை துரிதமாகக் கையாள்வதும், ஆபத்து காலங்களில் விரைந்து செயல்பட்டு அவர்களைப் பாதுகாப்பதும் இந்த அதிநவீனப் படையின் முதன்மை நோக்கம்.
இதற்காக பொது இடங்கள், பேருந்து நிலையம், அலுவலகம் உட்பட பல இடங்களில் இந்த அதிரடிப்படை போலீஸார் ரோந்து செல்வர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கெல்லாம் நடந்துள்ளது அல்லது நடைபெறலாம் என்ற விவரத்தை சேகரித்து அந்த இடங்களில் மீண்டும் குற்றங்கள் நிகழாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவர்கள் காவல் துறையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலருடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்கள். மேலும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்காக ரூ.357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக 2,545 போலீஸார் நியமிக்கப்பட உள்ளார்கள். பெண்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழகம் என்ற நிலை உருவாக்கப்படும்.
பெண்களுக்கு உடல் அளவில் மட்டும் கொடுமை நடப்பதில்லை. சமூக வலைதளம் மற்றும் மன ரீதியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன; அதையும் தடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் 70 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 12 தனிப்படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றன. இதேபோன்று மொத்தம் 270 குழுக்கள் உருவாக்கப்படும்.
சிங்கப்பெண் அதிரடிப்படையில் ஒரு திருநங்கையும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 100, 112, 1091 எண்களுக்கு வரும் அவசர அழைப்புகளுக்கும் சிங்கப்பெண் சிறப்பு படையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
சீருடையில் மட்டும் அல்லாமல் சாதாரண உடையிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தற்காப்பு, எதிர் தாக்குதல் உட்பட பல்வேறு சிறப்புப்பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
49 ட்ரோன்கள்
புதிதாக வருவோருக்கும் பயிற்சி அளிக்கப்படும். துப்பாக்கியை இயக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு துப்பாக்கி தரப்படவில்லை; தேவைப்பட்டால் கொடுக்கப்படும். சிங்கப்பெண் சிறப்புப் படையினர் அந்தந்த மாவட்ட எஸ்பி-யின் கீழ் பணியாற்றுவார்கள்.
அவர்களுக்கு வேறு பணி வழங்கப்படாது. 49 ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன. போலீஸார் நேரில் சென்று கண்காணிக்க முடியாத இடங்களில் இவை பயன்படுத்தப்படும்.
பொது இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தவிர்த்து, அவர்கள் எந்த நேரத்திலும் அச்சமின்றி பயணிக்கவும், வாழவும் ஓர் உறுதியான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே இப்படையின் நோக்கம். இவ்வாறு பவானீஸ்வரி கூறினார்.