214 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
214 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் 1959-ன்படி, கோயில் நிர்வாகத்தில் அறங்காவலர் குழுவுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழு வழிகாட்டுதலில்தான் கோயில் செயல் அலுவலர் பணியாற்ற வேண்டும் என்பது விதி. கோயில்களின் ஆண்டு வருமானம் அடிப்படையில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கும் மேல் உள்ள கோயில்களுக்கான அறங்காவலர்களை மாநில அரசு நியமிக்கும். அதற்கு குறைவாக வருவாய் உள்ள கோயில்களுக்கு அறநிலையத் துறை ஆணையரும், ரூ.2 லட்சம் வரை வருவாய் உள்ள கோயில்களுக்கு துறை இணை ஆணையரும் அறங்காவலர் குழுவை நியமிப்பார்கள்.

இந்த சூழலில், நிர்வாகக் காரணங்களுக்காக, தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் பணியாற்றி வந்த பரம்பரை அல்லாத அறங்காவலர்களை பதவி விலகுமாறு அறநிலையத் துறை சமீபத்தில் அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, பலரும் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், காலியாக உள்ள அந்த இடங்களுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

ஜூலை 22 கடைசி நாள் இதுகுறித்து அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 214 கோயில்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறங்காவலர் நியமன அறிவிப்பு, நியமனம் செய்யப்பட உள்ள கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம்ஆகியவை துறையின் இணையதளத்தில் (www.hrce.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை இணைய வழியில் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். அல்லது மேற்கண்ட இணையதளத்தில் இருந்து படிவத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரிலோ, விரைவு அஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை ஜூலை 22-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

214 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு
தே.ஜ. கூட்டணியிலிருந்து விலகியது தமாகா: ஜி.கே.வாசன் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in