

சென்னை: தமிழகத்தில் முதல் சட்டப்பேரவை தேர்தல் 1952-ம் ஆண்டு ஜன.2, 5, 8, 9, 11, 12, 16, 21, 25 ஆகிய 9 நாட்கள் நடைபெற்றது. அப்போது ஆந்திராவை உள்ளடக்கிய தமிழகம், சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்தது.
அந்த பொதுத்தேர்தலில் வாக்களிக்கும் வயது 21 ஆக இருந்த நிலையில், 2.75 கோடி பேர் சென்னை மாகாணத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 375 ஆக இருந்த நிலையில், உறுப்பினர்களை 309 தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யும் நிலை இருந்தது. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்த 66 தொகுதிகளில் இரட்டை வாக்குரிமை அமலில் இருந்தது.
அதேபோல், பட்டியல் சமூகத்தினருக்கு 62 தொகுதிகள், பழங்குடியினருக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த 66 தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் பொதுப்பட்டியல், தனிப்பட்டியல் என இரண்டு வேட்பாளர் பட்டியல்கள் இருந்தன.
இந்த இரண்டிலும் தனித்தனியாக வாக்களிக்க வேண்டும். இந்த முறையில், தனி உறுப்பினர்கள் (எஸ்சி, எஸ்டி), பொது உறுப்பினர்கள் என இரு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இரட்டை உறுப்பினர்கள் தேர்வு முறை 1952, 1957 தேர்தல்களில் இருந்தது. 1962-ம் ஆண்டில் இந்த முறை நீக்கப்பட்டு, தனித்தொகுதி முறை அமலுக்கு வந்தது.
1957-ம் ஆண்டு மார்ச் 31-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆந்திரா தனி மாநிலமாக பிரிந்து சென்றதால், சென்னை மாகாணத்தின் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 205 ஆக குறைந்தது.
அதன்பிறகு, 1962-ம் ஆண்டு பிப்.21-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கை ஒன்று அதிகரித்து 206 ஆனது. 1967-ம் ஆண்டில் பிப்.5, 21 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கை 234 ஆக அதிகரிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 1971-ம் ஆண்டு மார்ச் 1, 7 ஆகிய தேதிகளிலும், 1977-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. 1980-ம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டதால், அதே ஆண்டு மே 28-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
1984-ல் டிச.24-ம் தேதியும், 1989-ல் ஜன.21-ம் தேதியும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு ஜன.30-ம் தேதி ஆட்சி கலைக்கப்பட்டதால், அதே ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
அதன் பிறகு, 1996 ஜூன் 24-ம் தேதியும், 2001-ம் ஆண்டு மே 10-ம் தேதியும், 2006-ம் ஆண்டு மே 8-ம் தேதியும், 2011-ம் ஆண்டு ஏப்.13-ம் தேதியும், 2016-ம் ஆண்டு மே 16-ம் தேதியும், 2021-ம் ஆண்டு ஏப்.6-ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெற்றன.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.