

வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் திட்டப் பணிகள் முடிவடைந்ததால் நேற்று அதிவிரைவாக ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கர்க் அதிவேக ஏசி மின்சார ரயில் மூலமாகசோதனை ஓட்டத்தை மேற்கொண்டார். இது வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் (மேம்பால ரயில் வழித்தடம்) தடத்தை பரங்கிமலை வரை 5 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கும் பணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, இத்தடத்தில் கடந்த ஆண்டு நவ.7, டிச.15 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து சரக்கு ரயில்கள் இயக்கி சோதிக்கப்பட்டன. இது தொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், அவரது பரிந்துரைகளை ஏற்று, திருத்தம் செய்து மீண்டும் அறிக்கை அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், வேளச்சேரி - பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் மார்ச் 10-ம் தேதி மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், வேளச்சேரி - பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கர்க் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் ஒரு பகுதியாக, பரங்கிமலை முதல் வேளச்சேரி வரை மோட்டார் டிராலி மூலம் விரிவான சோதனை நடத்தப்பட்டது. இதில் தண்டவாள அமைப்பு, ஜல்லிகளின் அளவு, சமன்பாடு, பயணத் தரம் ஆகியவை ஆராயப்பட்டன. மேலும் மேம்பாலக்கட்டமைப்புகள், மின்சார வழித்தடங்கள், சிக்னல் மற்றும் இன்டர்லாக்கிங் அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஆணையர் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து 9 பெட்டிகளைக் கொண்ட ஏசி மின்சார ரயிலில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இயக்க நிலைகளில் ரயிலின் அதிர்வுத் தன்மைகள், பிரேக் பிடிக்கும் திறன், தண்டவாளத்தின்வடிவியல் (track geometry), சிக்னல்களின் தெரிவுநிலை ஆகியவற்றை சோதிக்கப்பட்டன.
புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் புழுதிவாக்கம், ஆதம்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் கட்டமைப்பு உறுதித்தன்மை, பயணிகள் நடமாடும் வசதி மற்றும் அணுகல் அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், கூடுதல் கோட்டமேலாளர் தேஜ் பர்த்தாப் சிங், முதன்மை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) எஸ்.கே.மவுரியா உட்பட பலர் உடனிருந்தனர்.