

சென்னை: வருமான வரித் துறை நடிகர் விஜய்க்கு விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015-16-ம் நிதி யாண்டில் ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 என நடிகர் விஜய் வருமான வரிக் கணக்கு காட்டியிருந்தார். அதை மதிப்பீடு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய் வீட்டில் 2015-ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்துக்காக விஜய் பெற்ற ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி 2022 ஜூன் 30 அன்று ரூ.1.50 கோடியை அபராதமாக விதித்தனர்.
அந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்த போது விஜய் தரப்பில், ‘‘சட்டப்படி அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை 2019 ஜூன் 30-ம் தேதிக்கு முன்பாகவே பிறப்பித்திருக்க வேண்டும். 6 ஆண்டுகள் காலதாமதமாக 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது.
வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.ஸ்ரீனிவாஸ், ‘‘வருமான வரி மதிப்பீட்டை எதிர்க்கும் மேல்முறையீட்டு காலம் முடிந்த பிறகு, 6 மாத கால அவகாசத்துக்குள் இந்த அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டப்படி வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது சரிதான். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள்ளாகவே வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.1.50 கோடி அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. அந்த உத்தரவு செல்லும். எனவே இதில் நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை என்று கூறி விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.
மேல்முறையீடு: இந்த விவகாரத்தில் வருமான வரித்துறையில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி, இதுதொடர்பாக வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட விஜய்க்கு அனுமதியளித்தார். மேலும்,அபராதம் விதித்த உத்தரவு தாமதமாக பிறப்பிக்கப்பட்டது என்ற காரணத்தையே மீண்டும் கூறி மேல் முறையீடு செய்யக் கூடாது என்றும் மற்ற காரணங்களை கூறி மேல்முறையீடு செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.