

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை (ஜூன் 27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலோர ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும் (ஜூன் 27), நாளை மறுதினமும் ஒரு சில இடங்களிலும், 29 முதல் ஜூலை 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை (ஜூலை 27) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 28-ம் தேதி விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 29-ம் தேதி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 3 செமீ, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், திருவள்ளூர் மாவட்டம் ஜெயா பொறியியல் கல்லூரி, ஆவடி, சென்னை மேடவாக்கத்தில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.