

சென்னை: முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்ட மாா்க்கண்டேயன் நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தமக்கு ஜாமீன் கோரி, மார்க்கண்டேயன் தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மார்க்கண்டேயன் தரப்பில் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மார்க்கண்டேயன் மனு திங்கட்கிழமை முதல் வழக்காக விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பின்னணி என்ன? - கோவில்பட்டியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக, விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் கடந்த 20-ம் தேதி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் கடந்த 22-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதேபோல், தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் மார்க்கண்டேயன் எம்எல்ஏவுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுபாதேவி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.