மதுரை: குற்ற வழக்கில் விடுதலையான அரசு ஊழியரின் பணியிடை நீக்க காலத்தை பணிக் காலமாக கருதி ஊதியம் மற்றும் பணப்பலன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பலராமன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்தேன். என் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் 2010 அக்.20-ல் பணியிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில் குற்றவழக்கில் என்னை நீதிமன்றம் 2022 ஜூன் 30-ல் விடுதலை செய்தது.
இருப்பினும் என் பணியிடை நீக்க காலம் ஈட்டிய விடுப்பாகவும், ஊதியமில்லா விடுப்பாகவும் அறிவிக்கப்பட்டது. இதை ரத்து செய்து ஊதியம் மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
மனுவை நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் குற்ற வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாள் முதல் ஓய்வுபெற்ற நாள் வரையிலான பணியிடை நீக்க காலத்தை பணிக்காலமாக கருதி முழுச்சம்பளம், பணப்பலன்களை பிழைப்பூதியத்தை கழித்து 2 மாதத்தில் வழங்க வேண்டும்.