

சென்னை: நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும், வழக்கின் விசாரணை அதிகாரிகள் தொடர்பாகவும் எந்த வீடியோக்களையும் வெளியிடக்கூடாது என்றும், பிப்.2-ம் தேதி அரசு மருத்துவர்கள் முன்பாக மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்டுமென்றும் சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் இரு மோசடி வழக்குகளின்கீழ் கடந்த டிச.13-ம் தேதி கைது செய்தனர்.
சவுக்கு சங்கருக்கு மருத்துவ ரீதியாக உடல்நல பிரச்சினைகள் இருப்பதால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென கோரி அவரது தாயார் கமலா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஜாமீன் நிபந்தனைகளை மீறி வழக்கு தொடர்பாகவும், வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டும் வகையிலும் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவதால் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது ‘மருத்துவ காரணங்களைக் கூறி ஜாமீன் பெற்றுள்ள சவுக்கு சங்கர், ஜாமீன் நிபந்தனைகளை மீறி தற்போது தொடர்ந்து மிரட்டல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்’ என அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கில் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவோ அல்லது வழக்கின் விசாரணை அதிகாரிகள் தொடர்பாகவோ கருத்துகளை தெரிவித்து எந்த வீடியோக்களையும் சவுக்கு சங்கர் வெளியிடக்கூடாது. குறிப்பாக, தவறான தகவல்களை பொதுவெளியில் பரப்பக்கூடாது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. அவர் அமைதியாக இருந்து மருத்துவ சிகிச்சை மட்டும் மேற்கொள்ள வேண்டும். அவரது உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை டீன் அமைக்க வேண்டும். அந்தக் குழுவின் முன்பாக சவுக்கு சங்கர் வரும் பிப்.2-ம் தேதி காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டும்.
அவரது உடல்நிலையை பரிசோதித்து மருத்துவமனை டீன் பிப்.3-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு அவரது ஜாமீனை ரத்து செய்வதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்.3-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.