

பாபநாசத்தில் தாமிரபணி ஆற்றில் இருந்து, சமூக ஆர்வலர்களால் கடந்த மே மாதம் டன் கணக்கில் அகற்றப்பட்ட துணிகள்.
மதுரை: தாமிரபரணி ஆற்றில், ஆடைகளை வீச உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது.
நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆனந்த விலாஸ் மண்டபம் உள்ளது. அதைக் கையகப்படுத்த தடை கோரி, பாபநாசம் சிவனு பாண்டியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தாமிரபரணி ஆற்றின் படித் துறைகளில் முன்னோருக்குச் சடங்கு செய்யும் போது, தினமும் ஒரு டன்னுக்கு குறையாத அளவு பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படாத ஆடைகள், துண்டுகள், காலணிகள் மற்றும் இறந்தவர்களுடன் தொடர்புடைய பொருட்கள் ஆற்றில் வீசப்படுகின்றன.
மதத்தின் பெயரால்கூட நீர்நிலையை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. தூய பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகள் இயற்கையில் மட்கக் கூடியவை. ஆனால், பாலியஸ்டர் துணிகள் மட்குவதில்லை. இந்த ஆடைகளால் ஆற்றுப்படுகையில் பாக்டீரியாக்கள் உருவாகின்றன.
நூறு ஆண்டுகள் வரை வாழும் இந்தியக் கருப்பு ஆமை மற்றும் இந்திய ஃப்ளாப்ஷெல் ஆமைகளின் வாழ்விடமாகவும் தாமிரபரணி ஆறு உள்ளது. இந்த வகை ஆமைகள், ஆற்றில் வீசப்பட்ட துணிகளில் சிக்கி இறக்கின்றன. ஆற்றில் வீசப்படும் சோப்பு, ஷாம்பு போன்ற ரசாயனங்களின் பயன்பாடு மீன்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும்.
நீர் நிலைகளை எந்த வகையிலும் மாசுபடுத்துவதை ஏற்க முடியாது. எனினும் இப்பிரச்சினை இந்துக்களின் நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடையது. தாமிரபரணி ஆற்றங்கரையில் சடங்குகள் மற்றும் வழிபாடுகளை முறைப்படுத்துவதால் அடிப்படை உரிமைகள் மீறப்படாது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல், மக்களின் உரிமைகளை மீறாமல் இருக்கும் நிலையில் பக்தர்கள் ஆன்மிகச் செயல்களை மேற்கொள்ளலாம்.
இந்துக்களால் தாமிரபரணி ஆறு புனிதமானதாகக் கருதப்படுவதையும், அதை வழிபடுவதையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதனால்தான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாமிரபரணி புஷ்கரம் நடைபெறுகிறது.
தாமிரபரணி ஆறு ‘தாமிர தேவி'யாக உருவகப்படுத்தப்படுகிறது. தாமிரபரணி ஆற்றை ‘ஒரு நபராக’ நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆறுகளைத் தெய்வங்களாகக் கருதும் நாம்தான் கழிவுகளையும் உருவாக்குகிறோம். ஆறுகளுக்குத் தீங்கு விளைவிப்பது முன்னோர்கள் காலத்தில் குறைவாக இருந்தது. அது ஆறுகளின் சுய சுத்திகரிப்புத் திறனுக்கு உட்பட்டதாகவே இருந்தது. தற்போது அவ்வாறு இல்லை.
பெரிதும் விமர்சிக்கப்படும் மனுஸ்மிருதியில், நீரில் சிறுநீர் அல்லது மலம் கழிக்கக் கூடாது. நீரில் துப்பக் கூடாது, அத்துடன் ரத்தம், இறைச்சி அல்லது விஷம் போன்ற பொருட்களை போட கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வீசத் தடை விதிக்கப்படுகிறது. இறந்தோருக்கான சடங்குகளைச் செய்வதன் பெயரால் ஆறு மாசுபடுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள செயல்திட்ட அறிக்கையை அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆற்றை மாசுபடுத்துவது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகக் கருதப்படும் என்று மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆற்றை மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். விதிமீறலில் ஈடுபடுவோர் பிற விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
ஆற்றை மாசுபடாமல் பாதுகாக்கும் உத்தரவை அமல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் சமூகப் பணிக் குழு உறுப்பினர்களையும் ஈடுபடுத்த வேண்டும். பணிக்குழு உறுப்பினர்களுக்குக் கவுரவ ஊதியம் வழங்கலாம். ஆற்றை மாசுபடுத்துவதைத் தடுக்கும் பணியில் ஈடுபடும் மக்களுக்கு போலீஸார் உதவ வேண்டும். தாமிரபரணி ஆற்றில் சுடப்படாத மண் பானையில் அஸ்தியைக் கரைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த வழக்கில் மனுதாரர் உரிமை கோரியுள்ள மண்டபம், தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. கட்டிடத்தை அறநிலையத் துறை கையகப்படுத்த வேண்டும். அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் இணைந்து மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.