

சென்னை: ‘ஆபத்தான தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்தார்.
திருவள்ளூரில் அம்மோனியா கசிவு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் பேசியது: திருவள்ளூர் கன்னிகைபேர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலையில் ஐஸ் பிளேக்ஸ் ஜெனரேட்டர் மெஷினுக்கு செல்லும் பைப்லைன் வால்வில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டவிபத்து காரணமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அந்த வளாகத்தில் இருந்த 74 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டுமென முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பங்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர இறந்தவர்களின் உடல்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி அடக்கம் செய்வதற்கான செலவை தமிழக அரசே மேற்கொள்ளும் எனவும், விபத்தில் உயிரிழந்து மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் நிதியை உடனே வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் அறிக்கையை 24 மணி நேரத்துக்குள்ளும், முழுமையான விசாரணையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மொத்தம் 54,957 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 27 லட்சத்து 65,313 பேர் பணிபுரிகின்றனர். அதில் அபாயகரமான தொழிற்சாலைகள் 6,669 உள்ளன. வரும் காலங்களில் இத்தகைய விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, உடனே குழு அமைத்து ஆபத்தான தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
மேலும், விபத்து ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.