

திண்டுக்கல்லில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் அமைச்சரின் மகள் வீடு.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவின் வீட்டில் வரி ஏய்ப்பு தொடர்பாக ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி வள்ளலார் தெருவில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீடு உள்ளது. இங்கு இன்று மதியம் இரண்டு மணியளவில் இரண்டு காரில் வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு (DGGl) அதிகாரிகள் நான்கு பேர், திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த ஆகஸ்ட் 17 ம் தேதி திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு. அவரது மகன் இ.பெ.செந்தில்குமார் எம்எல்ஏ., வீடு மற்றும் அவரது மகள் இந்திரா வீடு, இந்திராவுக்கு சொந்தமான வத்தலக்குண்டு அருகேயுள்ள மில்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அன்று அமைச்சர், அவரது மகன் வீடுகளில் சோதனை முடிந்தாலும் அமைச்சரி்ன் மகள், அவரது மில்களில் சோதனை நீண்டநேரம் நடந்தது.
இந்த சோதனைகளின்போது மில்களில் வரி ஏய்ப்பு நடந்தது தெரியவந்தது. இந்நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நான்கு பேர், அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திரா வீட்டுக்கு இரண்டு கார்களில் வந்து திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடைபெறுவது குறித்து தகவல் அறிந்த திமுகவினர் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். போலீஸ் பாதுகாப்புடன் சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.