மதுரை: ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்கக் கோரிய வழக்கில் மீனவர்களைப் பத்திரமாக மீட்க இந்திய தூதரகம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த பாபின் செசாரியோ, சத்ய ரஸ்மான் ராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: சகோதரர்கள் அஸ்வின் ரஞ்சித் குமார், சகாய ஜெனிஷ்ராஜ் ஆகியோர் ஈரான் மீன்பிடி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் பணிக்குச் சென்றனர்.
தற்போது அமெரிக்கா, இஸ்ரேல்நாடுகள் ஈரான் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதால் ஈரானில் எங்கள் சகோதரர்கள் பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கின்றனர். குண்டு மழை பொழிவதாகவும், உணவுகூட கிடைக்காமல் தவிப்பதாகவும் தெரிவித்தனர்.
குமரி மாவட்டம் கடியப்பட்டணம், குளச்சல், இணையம் மற்றும் முட்டம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 மீனவர்கள் ஈரானில் பணியாற்றி வருகின்றனர்.
தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் ஈரானில் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இவர்களைப் பாதுகாக்க ஈரான் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ஈரான் நாட்டில் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக அழைத்துவர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார்.
அரசுத் தரப்பில், ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தூதரகத்தை தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதைப் பதிவுசெய்த நீதிபதி, மனுதாரர்கள் உறவினர் விவரங்களை தூதரக மின்னஞ்சலுக்கு அனுப்பி உரிய நிவாரணம் பெறுமாறு உத்தரவிட்டார்.