சென்னை: ‘தமிழகத்தில் தனி நபர் பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என்ற அரசாணை ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளிமாநில மதுபானங்களுக்குப் பொருந்தாது’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து 1.680 மி.லி மதுபானத்தை தமிழகத்துக்கு கொண்டுவந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லரசு என்பவர் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழகத்தில் தனிநபர் பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என்ற அரசாணைப்படி வெளிமாநிலத்தில் இருந்தும் மதுபானங்களை கொண்டு வரலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதைத்தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமாரிடம் நேற்று முன்தினம் முறையிட்டார்.
ஆந்திர மதுபானம் கடத்தல்
இதற்கிடையே, ஆந்திராவில் இருந்து 3.4 லிட்டர் மதுபானத்தை விற்பனைக்காக தமிழகத்துக்கு கொண்டு வந்ததாக தமிழரசன், ராஜேஷ்குமார் ஆகியோர் மீது கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சிலம்புச்செல்வன், ‘‘தமிழகத்தில் 4.5 லிட்டர் வரை மதுபானங்களை தனிநபர்கள் தங்களது சொந்த உபயோகத்துக்காக வைத்துக் கொள்ளும் அரசாணைப்படி, தனிநபர்கள் குறிப்பிட்ட அளவுவரை மதுபானம் வைத்திருக்க அரசின் விதிகள் அனுமதிக்கும் போது, ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்ததாக போலீஸார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘‘தனிநபர்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக தமிழகத்தில் தயாரி்க்கப்படும் மதுபானங்களை 4.5 லிட்டர் வரை வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து மதுபானங்களைக் கொண்டுவர முடியாது’’ என்றார், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.நிர்மல்குமார், ‘‘தமிழகத்தில் தனிநபர் பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என்ற அரசாணை ஆந்திரா, புதுச்சேரி போன்றவெளிமாநில மதுபானங்களுக் குப் பொருந்தாது’’ எனக்கூறி, மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.