

சென்னை: ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்த அரசு வழங்கும் நிதியுதவி பெறுவதற்கு தகுதியுள்ள கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓவிய சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப் படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியை தனிநபர் கலைக் காட்சியாக நடத்த ஒரு நபருக்கு ரூ.25,000 வீதம் 10 கலைஞர்களுக்கும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக் கலைக்காட்சியாக நடத்த ஒரு குழுவுக்கு ரூ.50,000 வீதம் 5 குழுக்களுக்கும் அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிதியுதவியை பெற தகுதி வாய்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கலை பண்பாட்டுத் துறை ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச்செம்மல் விருது பெற்றவர்கள் கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்களும், இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோரும், விண்ணப்பிக்கக் கூடாது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு, கைப்பேசி எண், சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் 5 எண்ணிக்கைகள் (ஏ-4 அளவு) இணைத்து, ‘இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை 600 008’ என்ற முகவரிக்கு அக்.1-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் தகவல் பெற 044-28193195 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.