

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களான கிருஷ்ணா (22), தில்சூல் (21) ஆகியோர் சின்னாளபட்டி அருகே ஜே.ஊத்துப்பட்டி கிராமத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்தனர்.
இருவரும் நேற்று காலை ஜே.ஊத்துப்பட்டியில் இருந்து சின்னாளபட்டி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்றபோது பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பேரும் படுகாயமடைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருவரது உடல்களையும் மீட்ட போலீஸார், பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக் குறித்து அம்பாத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.