உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு: நடந்தது என்ன?

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்; 3-வது ஆண்டாக உரையை வாசித்தார் அப்பாவு
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு: நடந்தது என்ன?
Updated on
2 min read

சென்னை: சட்​டப்​பேர​வைக் கூட்​டத் தொடரின் முதல்நாளான நேற்று தேசிய கீதம் இசைக்​கப்​பட​வில்லை உள்​ளிட்ட காரணங்​களால், ஆளுநர் ஆர்​.என்​.ரவி தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்​காமல், பேர​வை​யில் இருந்து வெளி​யேறி​னார். இதற்கு முதல்​வர் ஸ்டா​லின் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். தொடர்ந்து 3-வது ஆண்​டாக ஆளுநரின் உரையை, பேர​வைத் தலை​வர் அப்​பாவு வாசித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் 2026-ம் ஆண்​டின் முதல் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் ஜனவரி 20-ம் தேதி தொடங்​கும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. அதன்​படி, நடப்​பாண்​டின் முதல் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்​ப​தற்​காக ஆளுநர் ஆர்​.என்​.ரவி காலை 9:23 மணிக்கு சட்​டப்​பேரவை வளாகத்​துக்கு வந்​தார். அவருக்கு பேண்டு வாத்​தி​யங்கள் முழங்க வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, பேர​வைத் தலை​வர் அப்​பாவு, செயலர் சீனி​வாசன் ஆகியோர் பூங்​கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்​று, சட்​டப்​பேர​வைக்கு உள்ளே அழைத்​துச் சென்​றனர். அவருக்கு முன்​பாகவே முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி மற்​றும் அனைத்து சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களும் பேர​வைக்​குள் வந்து அமர்ந்​திருந்​தனர். காலை 9.29 மணிக்கு தமிழ்த்​தாய் வாழ்த்​துடன் பேர​வைக் கூட்​டம் தொடங்​கியது. தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, அனை​வருக்​கும் பொங்​கல் மற்​றும் புத்​தாண்டு வாழ்த்​துகளைத் தெரி​வித்​து​ விட்​டு, தேசிய கீதம் பாடப்​படு​வது தொடர்​பான ஒரு கருத்தை தெரி​வித்​தார்.

அதற்கு பேர​வைத் தலை​வர் அப்​பாவு, ‘‘ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த்​தாய் வாழ்த்​தும், உரைக்கு பின்பு தேசிய கீத​மும் இசைக்​கப்​படு​வதே வழக்​கம். இது​தான் மரபு. இந்த அவை​யில் மக்​களால் தேர்​வான உறுப்​பினர்​கள் மட்​டுமே கருத்​துகளைக் கூற​முடி​யும். ஆளுநர் தனி​யாக கருத்து கூற உரிமை கிடை​யாது. அரசு எழுதி தரு​வதை அப்​படியே படிக்க வேண்​டும். ஆளுநர் உரை​யும் முன்​கூட்​டியே அவரிடம் வழங்கி உறு​தி​செய்த பிறகு​தான் அச்​சடிக்​கப்​பட்​டு, இங்கு கொண்​டு​வரப்​பட்டிருக்​கிறது’’என்​றார். மேலும், உரையைத் தொடங்​கு​மாறு அவர் ஆளுநரிடம் கோரிக்கை வைத்​தார்.

ஆனால், உரையைப் படிக்க மறுத்த ஆளுநர் ரவி சில கருத்​துகளைத் தெரி​வித்​து​விட்​டு, அவையை விட்டு வெளி​யேறி​னார். அப்​போது ஆளுநரைக் கண்​டித்து திமுக மற்​றும் அதன் கூட்​ட​ணிக் கட்சி உறுப்​பினர்​கள் கூச்​சலிட்​டனர்.பின்​னர் பேர​வைத் தலை​வர் அப்​பாவுபேசும்​போது ‘‘தேசிய கீதம் இசைப்​பது தொடர்​பாக ஆளுநர் எனக்கு கடந்த ஆண்டே கடிதம் எழு​தி​னார். அதற்கு பதி​லும் வழங்​கப்​பட்​டது. மேலும், பேரவை முன்​னவர் துரை​முரு​க​னாலும் விரி​வாக விளக்​கப்​பட்​டது’’என்​றார்.

இதையடுத்​து, ஆளுநர் ரவி அரசி​யலமைப்பை தொடர்ந்து மீறுகிறார். எனவே, அரசு தயாரித்த ஆளுநர் உரையை அவர் படித்​த​தாக அவைக்​குறிப்​பில் பதிவு செய்​யும் தீர்​மானத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கொண்​டு​வந்​தார். இந்த தீர்​மானம் குரல் வாக்​கெடுப்பு மூலம் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது.

ஆளுநரின் செயலுக்கு கண்​டனம் தெரி​வித்த முதல்​வர் ஸ்டா​லின், “ஆண்​டின் முதல் கூட்​டத் தொடரை ஆளுநர் உரை​யுடன் தொடங்​கும் நடை​முறையை மாற்ற, பிற மாநில அரசி​யல் கட்​சிகளு​டன் இணைந்து முயற்சி மேற்​கொள்​ளப்​படும்” என்று தெரி​வித்​தார். பின்​னர், ஆளுநர் உரை​யின் தமிழாக்​கத்தை பேர​வைத் தலை​வர் அப்​பாவு வாசித்து முடித்​தார்.

முன்​ன​தாக, ஆளுநர் உரையை வாசிக்​கத் தொடங்​கியதும், தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு நிலை மோச​மாக இருப்​ப​தாகக் கூறி அதி​முக, பாஜக, பாமக (அன்​புமணி) எம்​எல்​ஏக்​கள் கோஷங்​களை எழுப்​பிய​வாறு வெளிநடப்பு செய்​தனர். தொடர்ந்து 3-வது ஆண்​டாக தேசிய கீதம் பாட​வில்லை என்று கூறி ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, உரையை படிக்க மறுத்து வெளி​யேறிய​தால், பேர​வைத் தலை​வர் அப்​பாவு, ஆளுநரின்​ உரையைப்​ படித்​தது குறிப்​பிடத்​தக்​கது.

உரையை வாசிக்காததற்கு காரணம் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல், ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதற்கான காரணங்களை விளக்கி ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பேரவைத் கூட்டத்தில் ஆளுநரின் `மைக்' மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டு, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. உரையில் ஆதாரமற்ற, தவறான தகவல்கள் இருந்ததுடன், முக்கியப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது என்றுதெரிவித்துள்ளது உண்மைக்குப் புறம்பானது. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதி மட்டும்தான். முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகம் பின்தங்கியுள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. நான்கு ஆண்டுக்கு முன்பு அந்நியநேரடி முதலீட்டைப் பெறுவதில் 4-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 6-வது இடத்தில் நீடிக்கவே போராடுகிறது.

போக்‌சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55 சதவீதத்துக்கு மேலாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் 33 சதவீதத்துக்கு மேலாகவும் அதிகரித்துள்ளன. பள்ளி மாணவர், இளைஞர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பட்டியல் இனத்தவருக்கு எதிரான அட்டூழியங்களும், பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. ஒரே ஆண்டில் சுமார் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தியாவின் தற்கொலைதலைநகரமாக தமிழகம் திகழ்கிறது.

கல்வித் தரத்தில் சரிவும், கல்வி நிறுவனங்களில் நிர்வாகச் சீர்கேடும் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது அரசியலமைப்புக்கு எதிரானது. ஆயிரக்கணக்கான கோயில்களில் அறங்காவலர் குழு இல்லை. கோயில்களின் தவறான நிர்வாகத்தால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். பழங்கால கோயில்கள் மீட்பு குறித்த உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் செயல்படுத்தப்படவில்லை.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தற்போது 40 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தொழில்முனைவோர் தங்கள்நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் அமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனைத்துத் துறைகளிலும் கீழ்மட்ட ஊழியர்களின் நியாயமான குறைகள் தீர்க்கப்படவில்லை. தேசியகீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை அரசியலமைப்புக் கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு: நடந்தது என்ன?
இந்திய அரசியலமைப்பை தமிழக ஆளுநர் பகிரங்கமாக அவமதித்திருக்கிறார்: நாராயணசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in