

சென்னை: மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயண டோக்கன் ஜன.31-ம் தேதி வரை வழங்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சென்னையைச் சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜனவரி 2026 முதல் ஜூன் 2026 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகளுக்கு வழங்குதல் ஆகியவை 42 மையங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
2026 ஜன.31-ம் தேதி வரை தொடர்ந்து காலை 8 மணி முதல் இரவு 7.30 வரை வழங்கப்படும். அதன் பின்னர், இவை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.
சென்னையை சார்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கெனவே இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று தற்போது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்கள் அடையாள அட்டையுடன் தங்களின் தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும்.
அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், பட்டினப்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, மத்திய பணிமனை, சென்டரல் ரயில் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், ஐயப்பன்தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி, ஆவடி, அயனாவரம், ஐசிஎஃப், தண்டையார்பேட்டை;
சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம்-மெப்ஸ் பே.நிலையம், பூந்தமல்லி, பெரம்பூர் பே.நிலையம், வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர், கிளாம்பாக்கம், குன்றத்தூர் ஆகிய 42 மையங்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும்.