

சென்னை: ‘ஸ்ரீராம ஜென்மபூமி ஊழல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்’ என, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சித் துறைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான எம்.வி.ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது.
ஆனால், தற்போதைய பாஜக அரசு, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க் ஷேத்திர அறக்கட்டளையை இந்த ஆர்டிஐ சட்ட வரம்புக்குள் வராதவாறு பாதுகாத்துவைத்துள்ளது.
முறைகேடுகள் இல்லை என்றால் ஏன் இந்த பாதுகாப்பு? பெரும் பணமோசடி மற்றும் நிதி முறைகேடுகள் அம்பலமானதால், அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகளான சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் மீது ஏற்கெனவே பல்வேறு மோசடி புகார்கள் உள்ளன. இந்த குழு தற்போது கீழ்மட்ட ஊழியர்களை மட்டுமே குறிவைத்து விசாரிக்கிறது.
முக்கிய நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது. இந்த அறக்கட்டளை உருவாக்கத்திலும், கோயில் கட்டுமானப் பணிகளிலும் பிரதமரின் அலுவலகம் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.
பிரதமரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா இந்த அறக்கட்டளையில் உள்ளார். எனவே, இந்த ஊழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.
முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கருதப்படும் சம்பத் ராய், அனில் மிஸ்ரா உள்ளிட்ட அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள் மீது உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போதைய எஸ்சிடி குழுவின் மீது நம்பிக்கையில்லாததால், உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் ஒரு சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பக்தர்களின் நம்பிக்கையைச் சிதைத்த தற்போதைய ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க் ஷேத்திர அறக்கட்டளையை உடனடியாகக் கலைத்துவிட்டு, நேர்மையான நபர்களைக் கொண்டு புதிய அறக்கட்டளையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
கோயிலுக்காக உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் வழங்கிய ரூ.3,000 கோடிக்கும் அதிகமான நிதி என்ன ஆனது? என்பது குறித்து முழுமையான தடயவியல் தணிக்கை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.